10.07.2011

மின்சாரத்திற்கு நிரந்த தீர்வு எப்பொழுது?





தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை,கூடங்குளத்தில் அணுமின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம், சென்னையிலும் கல்பாக்கம் அணு மின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம். அமெரிக்காவின் “வால் தெருபோராட்ட்த்திலும் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை என்று அணு உலையை எதிர்க்கும் போக்கு வலுத்துக் கொண்டே செல்கிறது. உண்மையில் இது சரி தானா?
வள்ளுவர் சொன்னது போல
     குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
      மிகை நாடி மிக்க கொளல்
அணு உலையினால் ஏற்படும் நல்ல விளைவுகளையும்,தீயவிளைவுகளையும்   ஆராய்ந்தே  இந்த முடிவை எடுக்க வேண்டும். அதற்கு இந்த சூழ்நிலையில் எந்த நாடேனும் முன் வருகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

  ஜப்பானில் நடந்த்து உணமையில் ஒரு பேரழிவு மட்டுமல்ல, உலக மக்களுக்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கை. ஏனெனில் முதலில் அணு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான் தான். அதன் பின்னரே உலக மக்கள் அணு ஆயுதத்தினால் உருவாகும் பேரழிவைக் கண்டனர். இருப்பினும் அதை ஆக்கச் சக்திகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அதன் மூலம் பல தொழில் நுட்பங்களை உருவாக்கினார்கள். எந்த ஒரு சோதனையும் திறமையானவனுக்கு வைக்கும் பொழுது அதை சாதனையாக மாற்றிக் கொள்வான் என்பது ஜப்பானிடம் தெளிவாகத் தெரிந்தது. எனவே தான் இயற்கை எந்த சோதனையையும் முதலில் ஜப்பானில் நிகழ்த்துகிறது, அமெரிக்காவின் அணுக் குண்டுத் தாக்குதலும் இயற்கையே, மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தானே. இந்த வருடம் ஜப்பானில் நடந்த சூனாமியின் தாக்குதலும் அதன் மூலம், அணு உலையின் மிக பயங்கரப் பாதிப்பும், மனித இனத்திற்கே ஒரு எச்சரிக்கை. இந்த எச்சரிக்கையை இயற்கை நமக்கு ஜப்பான் மூலமே ஒவ்வொரு முறையும் சொல்கிறது. சிறந்த தொழில்நுட்பத்திலும்,உழைப்பிலும் உலகத்திற்கே சவால் விடும் ஜப்பானே இந்த அணு உலையின் பாதுகாப்பு பற்றி அச்சம் கொண்டுள்ளது.
     இருப்பினும் மனிதனுக்கே உரிய பலவீனம் மறதி, இதனால் புதிய அணு உலையை ஆரம்பிக்கும் திட்ட்த்தை கைவிட்ட நாடுகள் எல்லாம், வேறு வழியின்றி மீண்டும் இதே முறையையே கையில் எடுத்துள்ளது.சீனா அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. எல்லா நாடுகளும் அவசரத் தேவைகளையே பூர்த்தி செய்துக் கொள்கிறது. நீண்ட காலத் திட்டமாக இந்த அணு மின் உற்பத்தியைச் சொல்வது அறிவீனம்.


அது மட்டுமின்றி நம் மனித முயற்சியின் பலவீனம். இதற்கு மாற்று வழிமுறைகளை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து முயன்றால் நிச்சயம் தீர்வு கிடைக்காமலா போய் விடும். அதை விடுத்து நாடுகள் ஆளுக்கொரு பிரிவாக அணு உற்பத்தியில் ஈடுபடுவது, எந்த முன்னேற்றத்தையும் தராது. ஏனெனில் கதிர்களுக்கு நாடுகள் என்ற பாகுபாடுகளெல்லாம் தெரியாது. கதிர்வீச்சை எல்லைத் தாண்டக் கூடாது என்ற சட்டமெல்லாம் எந்த நாடும் போடவும் முடியாது. எனவே எந்த நாட்டில் அணுக்கதிர்களின் பாதிப்பு ஏற்பட்டாலும் அருகில் இருக்கும் நாடுகளும் அதன் பக்க விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும். எனவே எல்லா நாடுகளும் இணைந்தால் ஒழிய இந்த மின் உற்பத்திக்கான மாற்றுத் தீர்வை செயல்படுத்த இயலாது. மனிதர்கள் தானே நாம்! நம்மால் முடியாததா?
சூர்ய கதிரினைக் கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கும் முறையை நம்மால் வெற்றிக் கரமாக செயல்படுத்த முடியாதா? மின்சாரத்திற்கு நிரந்த தீர்வு எப்பொழுது? சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது....

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts