10.06.2012

வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா 2 (சினிமாக்காரர்கள்)


ரொம்ப நாளா இந்த புலம்பலை நான் கேட்டுட்டு வரேன். அது என்ன புலம்பலுன்னு உங்களுக்கும் இந்த பதிவு மூலம் விளக்கவே இந்த முயற்சி...
இது சினிமாக்காரர்களின் புலம்பல்…  புதிதாக ஒரு திரைப்படம் எடுக்க திட்டமிடும் திரைப்பட இயக்குனரும், அவருடன் இரண்டு உதவி இயக்குனர்களும்….

10.02.2012

காந்தி கணக்கு : தமிழர்களின் துரோகச் செயல்(தெளிவான விளக்கம்)


காந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசினார்.
       அதில் காந்தி கணக்கு என்ற வார்த்தை எப்படி வந்தது என்ற வரலாற்றைச் சொன்னார். பெரும்பாலும் திரும்ப வராத, ஏமாற்றப்பட்ட கணக்குகளையே காந்தி கணக்கில் எழுது என்று சொல்லும் வழக்கம் தமிழர்களிடையே பரவி  இருக்கிறது.
       இந்த வழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தானா … பிற மாநிலங்களிலும்  இருக்கிறதா ? என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த காந்தி கணக்கு என்ற சொல்வழக்கு பரவியிருக்கிறது.
       ஒரு நேர்மையான மனிதரைப் பற்றி இப்படி ஒரு வழக்கம் நிலவுவதை எண்ணி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். இருப்பினும் இந்த வார்த்தை தோன்றிய விதம் தமிழ்நாட்டில் வேறு விதமாகவே உள்ளது.
       இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் இருந்த காலக்கட்டங்களில் பல நிறுவனங்களின் கணக்குகளில்  குளறுபடிகள் வரும் பொழுதெல்லாம், அந்த தொகையை சரி செய்ய “ மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்திற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது என்ற கணக்கில் சேர்த்துவிடுவார்களாம். அது மருவி காந்தி கணக்கு என்று மாறி இன்றும் தமிழ் மக்களிடம் பரவி வருகிறது.

       இந்த தலைப்பில் தமிழில் ஒரு திரைப்படம் வேறு வந்தது.பிறகு அந்த தலைப்பிற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை மகான் கணக்கு என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். காந்தி கணக்கு என்ற சொல்லிற்கு பின்னே தமிழர்களாகிய நம்முடைய தேச துரோகச் செயல் அப்படமாகத் தெரிவதை நம்மால் மறுக்க முடியாது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக உதவி செய்யவில்லையென்றாலும், நன்கொடை வழங்கவில்லையென்றாலும், கணக்கில் வராத தொகையையெல்லாம், காந்தியின் போராட்டக் கணக்கில் எழுதிய அந்த துரோகச் செயலை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் எனும் பொழுது உண்மையில் ஒரு தமிழனாக நான் தலைக் குனிகிறேன்.
       அதுவும் காந்தி கணக்கு என்ற வார்த்தையின் பிரபலம், ஒரு குறிப்பிட்ட தமிழர்களின் ஊழலைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளது. அந்தக் குறிப்பிட்ட தமிழர்களின் இழிவான செயலால், ஓட்டு மொத்த தமிழர்களின் முகமாகவும் இது இன்று மாறியுள்ளது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று கப்பலோட்டியவரும், தமிழர்களாகிய நம் தன்மானத்தைத் தூக்கி நிறுத்தியவருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் தான் இப்படி சில ஊழல்காரர்களும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது, மனது வலிக்கிறது.
       அது மட்டுமின்றி அதை ஏற்கும் விதத்தில் நாமும் தெரிந்தோ தெரியாமலோ இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எத்தனைப் பெரிய இழிவான செயல். தமிழர்களின் நகைச்சுவை சிந்தனை ஒரு மகாத்மாவையே இழிவுப்படுத்தும் அளவு கேவலமாகப் போனது எதனால்…?
       சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட நாட்டிற்காக கொடுக்கும் கொடையில் தப்பானக் கணக்கை காட்டி அதை காந்தியின் பெயரிலேயே எழுதும் போக்கு எப்படி நம் தமிழர்களுக்கு வந்தது. இன்று இந்திய அரசாங்கம் எதற்கும் எங்களுக்கு உதவவில்லை, என்று கொடித் தூக்கும் பேச்சளவு தமிழர்கள், சுதந்திர வரலாற்றின் ஏடுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பக்கத்து நாட்டு விடுதலைக்காக சீறி எழும் தமிழ் வீரர்கள், நம் தேச விடுதலைக்காக நாம் ஆற்றிய ஊழல் பணியை திரும்பிப் பார்த்தால், நாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்று, தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்பட்டு, மனிதன் என்று சொல்லிக் கொள்ளவும் திரானியற்று தான் இருப்போம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

  தமிழகத்தில் தியாகம் ஒளிவிட்ட காலக்கட்டத்திலேயே, நம் தேசத்திற்காக கொடுத்த கொடையில், இப்படியொரு ஊழல் இருந்திருக்கிறதே…

       இன்றோ சுயநலத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு நன்கொடையிலும், திட்டத்திலும் எத்தனை ஊழல் நடந்துக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே...
வறுமை எனபது வன்முறையின் மோசமான ஒரு முகம் என்று சொன்னார் காந்தி.  இந்தியாவின் வறுமைக்கு முக்கிய காரணமே ஊழல் தான். அந்த ஊழலின் முதல் படி தமிழகத்தில் காந்தியின் பேரிலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதை நாம் ஆதரிக்கலாமா…?
       தமிழர்களாகிய நாம் ஊழலைத் தடுக்க முடியவில்லையென்றாலும், இந்த வார்த்தையின் பிரயோகத்தையாவது தடுக்கலாம் இல்லையா…?
       நாம் தமிழர்கள் என்பது உண்மையென்றால், இந்த வார்த்தையை நிச்சயம் நம் சூழலில் இருந்து ஒழித்தே ஆக வேண்டும். இது மகாத்மாவிற்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய மதிப்பு மட்டுமின்றி, நம் வருங்கால தலைமுறையினர் ஊழலை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையும் தான்.
இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்கால தலைமுறையினர் எண்ணி அதிசயப்படுவர், அது மட்டுமின்றி அதை நம்புவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் “ என்று காந்தியின் மறைவில் ஒரு புகழ்ப் பெற்ற மாமனிதர் சொன்னார்.
       ஆம் அவரின் வாழ்க்கை அப்படியொரு எளிமையானது. நம் கற்பனைக்குள் எளிதில் அகப்படாதது. அவர் தோன்றிய இந்நாளில் தமிழர்களாகிய நாம் இந்த ஊழல் வார்த்தையை நம்மிடையே இருந்து அகற்றுவதை கடமையாகக் கொள்வோம்.தமிழன் மேலுள்ள கரையை அகற்றுவோம். விரைவில் வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்
      
      



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

Popular Posts