10.23.2007

ஒரு முத்தம் கேட்டேன்


உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்..............
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்...................
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்..............

10.22.2007

இது போதும்!


முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் -- என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்--உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?
ஆனால் வீட்டினுள் நீ நுழைந்ததும்
உன் பார்வையில் அது
எந்த மாற்றத்தையும் செய்யவில்லை
என்பதில் ஏமாற்றம் தான் எனக்குள்
அந்த மாற்றத்தையும் நீ
கவனித்துவிட்டாய் நொடியில்..............
என்னவென்ற உன் பார்வைக்கு
என்ன சொல்வது நான்......
நீ உள்ளே வந்ததும் தான்
வீடு பிரகாசமடைந்து
குறைகள் கண்ணுக்குத் தெரிகிறத்தென்றேன்
மின்னலாய் ஒரு ஒளி
உன் சிரிப்பில் வீடு மேலும்
பிரகாசமடைந்தது................
சிரிக்காதே ! எங்கள் வீட்டில்
இப்பொழுதுதான் புதிதாக
டீவீ வாங்கியிருக்கிறோம்
உன் சிரிப்பு மின்னலைஅது தாங்காது!
என்றேன்.
உன் முகம் அந்நொடி சிவந்ததில்
நடுவெயிலில் செவ்வானத்தை
பார்த்தேன் நான்................
எனை சுட்டெறிப்பது போல்
பார்த்தாய் நீ.......................
வேண்டாம்! இது வாடகை வீடு
பற்றிக் கொள்ளப் போகிறத்தென்றேன்.............
கோபமாக 'நான் என்னத் தான் செய்ய?'
என்றாய்..........
'சமையல் செய்யேன்' என்றதும்
'ப்ளுக்' கென்று உன்னையறியாமல்
மீண்டும் சிரித்தாய்..................
அய்யோ! சிரித்துவிட்டேன்
என்று பரிதாபமாக என்னைப் பார்த்தாய்
நிறுத்தாதே! 'சீரி' என்றேன்
உங்கள் வீட்டுப் புது டீவீ?
கிண்டலாய் கேட்டாய் நீ
உன் சிரிப்புக்காக எத்தனை
டீவீ யை வேண்டுமானாலும்
இழக்கலாமென்றேன்
உனதுவிழிகள் என்னை
நேருக்கு நேர் சந்திக்க முடியாமல்
நாலாப் பக்கமும் அலைந்தன...........
என்னப் பேசுவது என்றுப் புரியாமல்
உனது உதடுகள் துடித்தன
திடீரென பேச்சை மாற்ற
'வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறது'
என்றாய்.......
உனக்காக நானும் வெளியில்
சென்றுப் பார்த்து விட்டு வந்தேன்
என்ன? என்ன சத்தம் யார் ?
என்றாய்
அண்டை வீட்டார் தான்
வீட்டிற்குள் எப்பொழுது
பூக்கள் வளர்க்க ஆரம்பித்தீர்கள்
என்று கேட்கிறார்கள்..........
ஏன்? ஏன் அப்படி கேட்கிறார்கள்
என்று ஒன்றும் அறியாதவள்
போல் அப்பாவியாய் கேட்டாய் நீ........
எல்லாம் நீ வந்ததால் தானென்று
அவர்களிடம் எப்படி என்னால்
சொல்ல முடியுமென்றேன்
உன் முகத்தில் தான்
எவ்வளவு பிரகாசம்
நொடியில் எங்கள் விட்டுப்பூக்களையெல்லாம்
தலைகுனிய வைத்துவிட்டாய்
உன் நாணத்தால் எங்கள் வீட்டிற்கு
புது சாயம் பூசி விட்டாய்
மொத்தத்தில் எங்கள் வீடு
புதியதாகியது உன் வரவால்
இது போதும்! என்று நான் சொன்னதும்
நீயும் இது போதும்! என்றாய் பதிலுக்கு................

10.19.2007

அன்பை பற்றிடடா!



நாலு பேரின் நடிப்பிலே
நாடக மேறியது மேடையில்
இன்று நாலாப் பக்கமும் நடிப்பிலே
மேடையின்றி நாடகமே
முறையோடு வாழ்பவர்க்கு
முதுகுக்கு பின்னே கண் வேண்டாம்
குறையை முறையாக்கி க் கொள்பவர்க்கு
கால் பாதத்திலும் கண் வேண்டும்
சாக்கடையும் சந்தன சாயம் பூசி
சமுதாய வீதியில் வலம் வரவே
வேசித் தொழிலும் நாசமாகும்
இந்த வீண் கெட்ட நாட்டினிலே
தாயும், தந்தையும் ரெண்டாகவே
தாரங்கள் மகனின் மனதினிலே
இந்த கோரங்கள் இங்கு நிலைத்திடவே
பதிகள் கோர்ட்டின் வாசலிலே
போலிகள் நிறைந்த சமூகத்திலே
புன்னகை பொலிவு கடை வீதியிலே
தாலிகள் சேலையின் மறைவினிலே
சில வேசியும் பத்தினி வடிவினிலே
தோழிகள் தொட்டில் சுமக்கையிலே
கட்டின மனைவி மலடியாய் வீட்டினிலே
பாவிகள் காவிகள் போர்வையிலே
பரம்பொருளும் பாவியாய் வீதியிலே
பெண்மையின் சாரம் நகைக்கையிலே
பொம்மையும் தாய்மை அடையுதடா!
ஆண்மை வேடம் தரிக்கையிலே
இயந்திரம் தந்தை ஆனதடா!
தூக்க மாத்திரை உண்டிடவே
உனக்கு வாழ்க்கை தேவையா என்னிடடா!
சொர்க்கம் ஒன்று உண்டென்றால்
புவி வாழ்வில் அன்பை பற்றிடடா!

10.18.2007

பேசாத விட்ட நொடிகள்


பேசுவோம் பேசுவோமென்று நாம்
பேசாத விட்ட நொடிகள் தான்
நம் நட்பை இன்றும் பேசுகிறது.....
சிரிப்போமென்று தெரியாமல்
சிரித்த கணங்கள் தான்
நெஞ்சில் இன்றும்
பசுமையாக நிற்கிறது................
கவிதையாய் நினைவுகளும்
புதினமாய் நிகழ்வுகளும்
ஓவியமாய் சந்திப்புகளும்
புதைந்திருக்கும் நெஞ்சுக்குள்
எப்பொழுதாவது நிகழும் சந்திப்பு
நமக்குள்ளிருக்கும் நினைவுகளை
விழிக்கச் செய்யுமென்றால்
நம் நட்பின் அந்த நொடிகள்
லேசான ஈரத்துடனே பதிவாகும்
நெஞ்சுக்குள் ஆழமாய்.............................

10.17.2007

பொது மகளீர்.......................


இது வரை குப்பைத் தொட்டிக்கு
செல்லாத காகிதங்களால் ,நாங்கள்
குப்பையாகிறோம்

.......................................................................................


குப்பைத் தொட்டிக்கு
சென்ற பின்னும்
மீண்டும் பூஜைக்கு வரும்
மலர்கள் நாங்கள்

.........................................................................................


வெற்றுக் காகிதங்கள் நாங்கள்
இது வரை எங்களின் மேல்
எந்த ஓவியமும் வரையப்படவில்லை
எந்த கவிதையும் எழுதப்படவில்லை
கிறுக்களுக்கும் கிழிசலுக்குமே
எங்களின் சதைகள் தேவைப்படுகின்றன
வெற்றுக் காகிதங்கள் நாங்கள் .................................

10.16.2007

நினைவெனும் மெல்லியநூலிழை


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும் மெல்லியநூலிழையால்
பிணைக்கப்பட்டிருக்கிறது
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை................
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்
சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
உனது நேசங்க்களின் தொகுப்புக்கு
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே!
தயவு செய்து பேசிவிடு!
என் சுவாசத்தினுள் உனது
நேசக் காற்றினை வரவேற்க
காத்திருக்கிறேன்......
உனது வார்த்தைகளில் சில
என்னை கோபப்படுத்தியதுண்டு
அப்பொழுதெல்லாம் எனது
கோபத்தை ரசிப்பதற்க்காகவே
பேசினேன் என்பாயே.....
இப்பொழுது என் காதலை
ரசிக்க கொஞ்சம் பேசேன்!
நான் நிச்சயம் கோபம்கொள்ள மாட்டேன்

உனக்கு ஒரு கும்பிடு

தலைவணங்குகிறது

கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................



அனுமதிப்பதில்லை


கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................




என்னைப் பார்த்து நீ......


துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது

Popular Posts