10.16.2007

நினைவெனும் மெல்லியநூலிழை


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும் மெல்லியநூலிழையால்
பிணைக்கப்பட்டிருக்கிறது
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை................
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்
சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
உனது நேசங்க்களின் தொகுப்புக்கு
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே!
தயவு செய்து பேசிவிடு!
என் சுவாசத்தினுள் உனது
நேசக் காற்றினை வரவேற்க
காத்திருக்கிறேன்......
உனது வார்த்தைகளில் சில
என்னை கோபப்படுத்தியதுண்டு
அப்பொழுதெல்லாம் எனது
கோபத்தை ரசிப்பதற்க்காகவே
பேசினேன் என்பாயே.....
இப்பொழுது என் காதலை
ரசிக்க கொஞ்சம் பேசேன்!
நான் நிச்சயம் கோபம்கொள்ள மாட்டேன்

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts