8.02.2012

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

   முதல் முறையாக என் வலைத்தளத்தில் வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியை பதிவிடுகிறேன். ஏனெனில் இது அனைவரும் அறிந்துக் கொள்ளக் கூடிய செய்தி. இதை என் வலைத்தளத்தில் பதிவிடுவதில் நான பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
   சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

   தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

   ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

   அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

    கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயற்கைக்கோள் சாதனம்)RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்

நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

    இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

    இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

     பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.


Tamil bell Found in New Zealand
      நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

     இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.



          இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.

      கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி -kalingatamil@yahoo.co.in

     நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள்.

  நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.

நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.

நன்றி.

வினோதன்.

 https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/199164690109807





வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

11 comments:

  1. நல்லதொரு தகவல்...
    நன்றி...
    (த.ம. 3)

    ReplyDelete
  2. மெல்ல தமிழ் இனி சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

    இது நம் பாரதியின் தீர்க்க தரிசன வரிகள். நாம் நம் மொழியின், கலாசார அழிவின் இறுதியில் நிற்கிறோம். ஜீரணிக்கவோ, தவிர்கவோ முடியாத விஷயம் தான் ஆனால் அது தான் உண்மை. யாரிடமும் கெஞ்சியோ, கொஞ்சியோ ஒரு மொழி தன் வாழ்நாளை நீட்டிக்க முடியாது.
    தமிழன் பெருமைகளை இன்றைய தலைமுறையிடம் சொல்லி தமிழனை சிறுமை படுத்தாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பாரதியின் வரிகளைச் சொல்லி எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் கொண்டு வர நினைக்கிறீர்கள்.
      இது தமிழனின் பெருமையைப் பறைச்சாற்ற மட்டுமில்லை. ஒரு மிகப் பெரிய உண்மைகளை உலகம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனும் தான். நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது தமிழ் இணையத்தில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மட்டுமல்ல ஆங்கில மொழியின் சாரம்சமும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருக்கிறது.
      தயவு செய்து இனி இப்படி சொல்லாதீர்கள். இது வாழ்க்கை முறை, பெருமை அல்ல. இப்படியே தான் ஒரு தலைமுறையே ஒன்றும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. நாளை உங்கள் பிள்ளை உங்களைப் பார்த்து கேள்விக் கேட்பான். இதை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று...? தமிழுக்கு என்றும் அழிவில்லை.
      நாளையே மரணமென்றாலும் இயன்றவரை மகிழ்ச்சியுடன் வாழ்வது தான் வாழ்க்கை. இதை தான் பண்டைய தமிழர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்தது.

      Delete
    2. ஜீவன் சிவன் அவர்களே:

      “மெல்லத் தமிழினிச் சாகும்” என்ற “கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்” என்பதுதான் பாரதியின் கருத்து.

      இப்பாடலைப் பற்றி கீதா சாம்பசிவம் கீழ்க்கண்ட பதிவில் சிறப்பாக கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். நம்பிக்கையோடு நம்மாலான செயல்கள் புரிவோம்.

      http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0804gs_bharathi.php

      Delete
  3. ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி. இதை அனைவரிடமும் சேர்க்க பதிவர்களும் உதவ வேண்டும்.

      Delete
  4. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆமைகள் கூட தமிழ் கற்றிருந்ததை அறியக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே. நியூஜலேண்டில் கண்டெடுத்த மணியானது, கடல் கடந்த தமிழ் வல்லமை கொண்ட ஆட்டு மந்தைகளின் தலைமை ஆமையுடைதாக இருக்கலாம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆட்டு மந்தைகளுக்கு பதில் ஆமை மந்தை என திருத்தி வாசிக்கவும்.

      Delete
    2. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. திருத்தியே வாசித்தேன்.

      Delete
  5. சகோதரி என்று சொல்வதற்கு பதில் அக்கா அல்லது தங்கை என்றே சொல்ல வேண்டும், ஏனெனில் சகோதரி என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல. வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்தது. சகோதரி என்றால் உடன்பிறந்தவள் என்று பொருள்.மூத்தவளா இளையவளா என்று குறிப்பிடுவதற்காக மூத்த சகோதரி, இளைய சகோதரி என்று அழைக்க வேண்டியதாகிறது. இந்த வழக்கம் கூட ஆங்கில மொழியில் இருந்து வந்தது. ஆங்கிலத்திலும் Sister, Elder Sister, Yonger Sister தான் உள்ளது. ஆனால், நம் அழகு தமிழில் அக்கா தங்கை என்று இயல்பாக அழைக்க அழகு சொற்கள் உள்ளன. எனவே இனிமேல் மூத்த சகோதரி, இளைய சகோதரி என்ற சொற்களை தவிர்த்து அக்கா தங்கை என்று இயல்பாக குறிப்பிட்டால் அழகாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான தகவல். நிச்சயம் பின்பற்றுகிறேன்.இருப்பினும் அகவை தெரியாத சந்தர்ப்பத்தில் வேறு விழியில்லாமல் பயன்படுத்த நேர்கிறது.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts